பல்கலைக்கழகங்களில் சாதிய ரீதியாக பாகுபாடு இருப்பதை தடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ரோஹித் வெமுலா,பாயல் தாட்கல் ஆகியோரின் தாயார் இருவரும் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு சாதி அடிப்படையிலான அடக்குமுறைகளால் மனமுடைந்த ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் மருத்துவம் படித்து வந்த பாயல் தட்வி கல்லூரியில் நடந்த சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை காரணமாக கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து சாதி ரீதியிலாக பாகுபாடுகள் உள்ளதாக பல குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாணவர்களை பாதிக்கும் இந்த சாதிய பாகுபாடுகளை தடுக்க கோரி ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தட்வி ஆகியோரின் தாயார் இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பல்கலைக்கழகங்களில் தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சாதி அடிப்படையிலான பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சம்பவங்கள் ஒருவரின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளன. அணைத்து பல்கலைக்கழகத்திற்கு என யுஜிசி விதித்துள்ள சமத்துவ விதிகளுக்கு புறம்பாக இந்த சாதிய பாகுபாடு உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சாதி அடிப்படையில் நடைபெறும் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் அத்துடன் பல்கலைக்கழகங்களில் சமத்துவத்தை நிலை நிறுத்த ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது.